ஆராதனை தியானம்.. குஷ்டரோகி பிரமாணம் எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்...
இன்றைய ஆராதனை தியானம்
எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்...
இதுவே தேவன் நியமித்த ஆராதனையின் நோக்கமாகும்..
தியான பகுதி.
லூக்கா 17.11-16
பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்துவதும் குமாரனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவதும் ஆராதனையை பூரணப்படுத்துகிறது..
பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.
அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான், அவன் சமாரியனாயிருந்தான்.
லூக்கா 17:16
வேதத்தில் குஷ்டரோகம் மிகத் தெளிவாக பாவத்துக்கு ஒப்புமைப்படுத்தியிருக்கிறது..
இந்த அற்புதத்தில் பாவத்தின் 3 விளைவுகளை அறியலாம்.
1. பாவம் 9 யூதர்களையும் 1 சமாரியனையும் சமமாக பார்க்கிறது.. அதாவது பாவம் எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி..வ 12
2. பாவம் நம்மை கடவுளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் தூரப்படுத்துகிறது..வ 12
3. பாவம் தேவனுடைய இரக்கத்துக்காக கதறுகிறது வ 13
இந்த அற்புதத்தில் 3 குஷ்டரோக பிராமண மீறுதலை கிறிஸ்து செய்கிறார்..
1. குஷ்டம் சுகமாகுமுன் ஆசாரியனிடத்துக்கு அனுப்புகிறார்.வ 14
2. ஆசாரியர்கள் தான் பாளையத்துக்கு போய் குஷ்டரோகியை சோதிக்க வேண்டும் வ 14
3. குஷ்டம் சுகமாகுமுன் ஆசாரியர்களுக்கு காண்பிக்க கட்டளையிடுகிறார். வ 14
அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானர்கள்..
இந்த அற்புதத்தில் 3 குஷ்டம் சுகமானதின் அதாவது ஆரோக்கியம் பெற்றதின் விளைவுகளை அறியலாம்..
1. பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தகிறான் வ 15
2. குமாரனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான் வ 16
3. புறஜாதியான் இரட்சிப்பின் குணமாகுதலை பெறலாம் என்பதற்கு அடையாளம்..வ 18
குஷ்டரோகியின் ( பாவத்துக்கு ) 2 பிரமாணங்கள் உண்டு.
1. குஷ்டரோகியாய் இருக்கும் போது லேவி 13
2. குஷ்டரோகம் குணமாகும் போது லேவி 14
லேவியராகமம் 13-14
குஷ்டரோகி குணமான பின் உள்ள பிரமாணத்தை பாவப்பாரிகரியாகிய கிறிஸ்து எவ்வாறு சிலுவையில் நிறைவேற்றினார்..
பிரமாணம் :
லேவி 14.1-7
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
குஷ்டரோகியினுடைய சுத்திதகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும். ஆசாரியன் பாளையத்துக்குப் புறம்பேபோய்: குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால், சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக்கடவன். பின்பு, ஆசாரியன் ஒன்றை ஒரு மண்பாண்த்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொல்லச்சொல்லி, உயிருள்ள குருவியையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து, குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.
லேவியராகமம் 14:7
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கும் பலி பொருட்கள்..
1. உயிரோடியிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகள்
2. கேதுரு கட்டை
3. சிவப்பு நூல்
4. ஈசோப்
5. ஊற்று நீர்
குஷ்டரோகியை குறிக்கும் பலி பொருள்.
1. மண் பாண்டம்
ஆராதனை சிந்தனை :
பலியான குருவியும் பறக்க விடப்பட்ட குருவியும்....
குஷ்டரோகி சுத்தமான பின் கொண்டுவரப்பட்ட இரண்டு குருவிகளில். ஒன்று கொல்லப்பட்டது அது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை சுட்டிக்காட்டுகின்றது. ஆசாரியன் அடுத்த குருவியை எடுக்கின்றான்.
அந்த குருவி உயிரோடு இருக்கின்றது. உயிரோடு இருக்கும் குருவி கொல்லப்பட்ட குருவியின் ரத்தத்தில் தோய்க்கப்படுகின்றது. உயிரோடு இருக்கும் குருவின் உடல் கொல்லப்பட்ட குருவியின் ரத்தத்தினால் பூசப்படுகின்றது. அதன்பின்னர் நடப்பது உயிரோடு இருக்கும் குருவியை ஆசாரியன் பறக்க விடுகின்றான். மேல் நோக்கி செட்டை அடித்த அந்த குருவி பறந்து செல்கின்றது. கொல்லப்பட்ட குருவி இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் அடையாளமாக மாறுகிறது.
பறந்து சென்ற குருவி இயேசுவின் மரணத்தினால் ஒரு பாவி பெரும் விடுதலைக்கும் மறுவாழ்வுக்கும் அடையாளமானது.
அது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் ஓர் அடையாளமாக மாறுகிறது.
உயிர்த்து எழுந்த கிறிஸ்து பரலோகத்திற்கு சென்று பிதாவின் வலது பாசத்தில் வீற்றிருக்கிறார். குஷ்டரோகி சுத்தமானான்.
பாவி பரிசுத்தவானாக மாறிவிட்டான். இப்பொழுது அவன் சுத்தமான ஒரு மனிதன்.
அவன் ஒரு தீட்டு உள்ள மனிதன் அல்ல.
தீட்டு தீட்டு என்று இனி அவன் கத்த வேண்டிய அவசியமும் இல்லை.
அவனுக்கு ஓர் பரிசுத்தம் கிடைத்தது. அது தேவனால் கிடைத்தது.
அவனுக்கு ஒரு அற்புத சுகம் கிடைத்தது.
அது தேவனால் கிடைத்தது.
அந்த மனிதனின் பாவம்,அந்த மனிதனின் வியாதி, அவனுடைய துன்பம், அவனுடைய துக்கம், அவருடைய கண்ணீர் அனைத்தையும் பறந்து சென்ற குருவி தூக்கிக்கொண்டு போய்விட்டது. இயேசு கிறிஸ்துவின் மரணத்தை விசுவாசிக்கும் ஒவ்வொரு மனிதனுடைய துக்கமும் ஒவ்வொரு மனிதனுடைய துன்பமும் கண்ணீரும் கவலைகளும் உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமையினால் நீக்கப்படுகிறது..
பாவம் நீங்கி சுத்தமானவன் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க தகுதி பெறுகிறான்..
கீ கீ 101 பாடலை கேளுங்கள்..
https://youtu.be/k2HIWKHi3Oc?si=nxORpYnLom6wsN-S
1. என் இயேசுவே உம்மையே
நான் நேசிக்கிறேன்
வேறெந்த வீண் வாழ்வையும்
நாடாதிருப்பேன்
உம்மாலே மா நன்மையை
நான் கண்டடைந்தேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்
2. இப்பாவியின் பேரில் முந்தி
நேசம் வைத்தீர்
நீர் ப்ராணத் தியாகஞ் செய்து
மீட்டுக்கொண்டீர்
முட் கிரீடம் தீங்காயமுந்
தியானிக்கிறேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்.
3. பேரன்பின் சொரூபி உம்மைப்
போற்றுகிறேன்
எப்போதும் உம்மண்டை
தங்க வாஞ்சிக்கிறேன்
என் ஜீவன் போனாலுங்கூட
நீங்க மாட்டேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்.
4. பேரின்பம் மேலோகத்தில்
ஆனந்தங் கொள்வேன்
நீடுழி உம்முகம் கண்டு
ஸ்தோத்தரிப்பேன்
எப்பாவ மில்லாமலும் நான்
வாழ்த்தல் செய்வேன்
என் நாதா மென்மேலும்
உம்மை நேசிக்கிறேன்.
நான்காவது சரணம் பூரண பரலோக ஆராதனையை நினைவு படுத்துகிறது..
எப்பாவம் இல்லாமல் வாழ்த்தல் செய்யும் பாக்கியம் பரலோகில் மட்டுமே..
ஆனாலும் பூமிக்குரிய இந்த பரலோக ஆராதனையின் நிழலில் இதை அப்பியாசப்படுத்த தேவன் கிருபை செய்வாராக..
கர்த்தருடைய பந்தியில் நம்மை நாமே சோதித்தறிதலும் நிதானித்து அறிதலும் அவசியமாகிறது..
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்
1 கொரிந்தியர் 11:28
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
1 கொரிந்தியர் 11:31
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment